News - இராமாயணா தீம் பார்க் திறப்பு
பெ.நா.பாளையம், டிச. 27: பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இராமாயணா கருத்துப் பூங்கா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இன்றைய தலைமுறையினர் நல்ல நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வித்யாலயமானது இராமாயணத்தில் உள்ள பல்வேறு சம்பவங்களை மையமாக வைத்து இக்கருத்துப் பூங்காவை வடிவமைத்துள்ளது.
இங்கு ஆதிஷேசன், சிரவணன் காவடி, சீதை சுயம்வரம், வனவாசம், இலட்சுமண கோடு, சுக்ரீவன் வாழ்ந்த ரிஷிமுக பர்வதம், வாலி-சுக்கிரீவன் சண்டையிடுதல், இராம லக்குமணர்களை பிடித்துக் கொண்ட தலை கால்கள் இல்லாத கபந்த அரக்கன், ஜடாயு பறவை, சுரசா அரக்கியின் வாயில் புகும் அனுமன் போன்ற பல்வேறு சம்பவங்களின் பிரம்மாண்ட உருவங்கள் அமைக்கப்பட்டு அவைகளில் குழந்தைகள் விளையாடி மகிழும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இச்சம்பவங்கள் தொடர்பாக விளக்கப் பலகையும் இதன் அருகே நிறுவப்பட்டுள்ளது. இதனை வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி ஆத்மாராமானந்தா முன்னிலையில் உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் உப தலைவர் சுவாமி ஸ்மராணானந்தா திறந்து வைத்து பூங்காவைச் சுற்றிப் பார்வையிட்டார். தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் பார்வையிட்டு விளையாடி மகிழ்ந்தனர்.
இப்பூங்கா தொடர்ந்து தினமும் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும். இதனை அனைவரும் தவறாது கண்டு களித்து நம் பாரம்பரிய பெருமைகளை அறிந்து பயன் பெற வேண்டும் என சுவாமி ஆத்மாராமானந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.
For more info : kailasam_iyer@yahoo.com
Report Abuse